Saturday, January 2, 2016

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 11

பாடல்:
தேனமர் பொழில்கொள் ஆலை விளை செந்நெல் துன்னி 
     வளர் செம்பொன் எங்கும் நிகழ 
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து 
     மறைஞான ஞான முனிவன் 
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து 
    நலியாத வண்ணம் உரைசெய் 
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் 
    அரசாள்வர் ஆணை நமதே.                      11

                   திருச்சிறம்பலம்
பொருள்:
தேன் நிறைந்த பூங்காக்களைக் கொண்டதும், கரும்பும்(ஆலை), விளைகிற செந்நெல்லும் நிறைந்துள்ளதும், பொன் போல் ஒளிர்வதும், நான்முகன்(வழிப்பட்ட) காரணத்தால் பிரமாபுரம் என்ற ஊரில் தோன்றி அபரஞானம் பரஞானம் ஆகிய இரு வகை ஞானங்களையும் உணர்ந்த ஞானசம்பந்தனாகிய யான், தாமே வந்து சம்பவிக்கும் நவக்கிரகங்கள், நாள் நட்சத்திரம் போன்றன எல்லாம் அடியவரை வந்து வருத்தாதவாறு பாடிய இப்பதிகத்தை ஓதும் அடியவர்கள் வானுலகில் அரசு புரிவர். இது நமது ஆணை.


கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 10

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 10

பாடல்:
கொத்தலர் குழலியோடு விசையற்கு நல்கு 
      குணமாய் வேட விகிர்தன் 
மத்தமும் மதியு நாகம் முடிமேல் அணிந்து என் 
      உளமே புகுந்த அதனால் 
புத்தரோடு அமணை வாதில் அழிவிக்கும் அண்ணல் 
      திருநீறு செம்மை திடமே 
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
     அடியார் அவர்க்கு மிகவே.                   10

பொருள்:
கூந்தலில் மலர்க்கொத்துகள் அணிந்த உமையம்மையாரோடு வேடன் வடிவில் சென்று அருச்சுனனுக்கு அருள் புரிந்த சிவபெருமான், தன் முடிமேல் ஊமத்தை மலர், பிறைச்சந்திரன், பாம்பு ஆகியவற்றை அணிந்த என் பரமன், என்னுடைய உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், புத்தர்களையும் சமணர்களையும் என் அப்பனின் திருநீறே வாதில் தோற்றிடச் செய்யும். அதன் பெருமை நிச்சயமே. அத்தகைய திருநீறு அடியவர்களுக்கு நல்லவனவற்றையே செய்யும் மிகவும் நல்லவனவற்றயே செய்யும்.


கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 9
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 11

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 9

பாடல்:
பலபல வேடமாகும் பரன் நாரி பாகன் 
   பசுவேறும் எங்கள் பரமன் 
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்து என் 
   உளமே புகுந்த   அதனால் 
மலர்மிசையோனும் மாலும் மறையோடு தேவர் 
   வருகாலமான பலவும் 
அலைகடல் மேரு நல்ல அவை நல்ல நல்ல 
   அடியார் அவர்க்கு மிகவே.                   9
பொருள்:
பல பல வேடங்கள்/கோலங்கள் கொள்கிற பரம்பொருள், மாதோருபாகனும், தன் முடிமேல் கங்கை, எருக்கமலர் ஆகியவற்றை சூடியவனும், தன் இடப்பக்கத்தில் உமையவளோடு எருதின்மேல் வந்து என் உள்ளத்தில் புகுந்து தங்கியுள்ளான். அதனால், தாமரைமலர்மேல் உறையும் பிரமன், திருமால்,வேதங்கள், தேவர்கள் ஆகியோரும், எதிர்காலம், அலையுடைய கடல், மேரு முதலான மலைகள் ஆகியவையும் நமக்கு நல்லனவே செய்வர். அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 8
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 10

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 8

பாடல்:
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து 
      மடவாள் தனோடும் உடனாய் 
வாண்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்து என் 
      உளமே புகுந்த அதனால் 
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தனோடும் 
      இடரான வந்து நலியா 
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
      அடியார் அவர்க்கு மிகவே.                 8
பொருள்:
அன்று அம்பெய்திய மன்மதன் அழியும்படி நெற்றிக்கண்ணைத் திறந்து எரித்த சிவபெருமான், எருதின்மேல் (விடை -விலங்கினத்தில் பெரும்பாலும் ஆண் பருத்திருப்பதால், விடை எனப்படுகிறது) தன் இடப்பக்கத்தில் உமையம்மையாரை உடையானும், தன் முடிமேல் ஒளி பொருந்திய பிறைச்சந்திரன், வன்னி இலை, கொன்றைப்பூ ஆகியனவற்றை சூடியவனுமாகிய என் பரமன் உமையாளோடு என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், ஏழ் கடல்களால் சூழப்பட்ட இலங்கையின் மன்னான இராவணன்(பிறன்மனை நாடியதால் ஏற்பட்டது) போன்ற இடர்களும் வந்து நம்மைத் துன்புறுத்தா. ஆழமான கடலும் நமக்கு நல்லனவே செய்யும் அடியவர்களுக்கு அவை மிகவும் நல்லனவே செய்யும்.

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 7
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 9

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 7

பாடல்:
செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக 
      விடையேறு செல்வன் அடைவார் 
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்து என் 
      உளமே புகுந்த அதனால் 
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் 
      வினையான வந்து நலியா 
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
      அடியார் அவர்க்கு மிகவே.               7
பொருள்:
செம்பு போன்ற இளந்தனங்களையுடைய உமையவளைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு, எருதின் மேல் ஏறிவரும் செல்வனாகிய சிவபெருமான் தன்னையடைந்த அழகிய பிறைச்சந்திரனையும், கங்கையையும் தன் முடிமேல் அணிந்தவனாய், என் உள்ளத்துள் புகுந்து தங்கியுள்ளான். அதனால், காய்ச்சல்(சுரம்), குளிர்காய்ச்சல், வாதம், மிகுந்த பித்தம் முதலான துன்பங்கள் நம்மை வந்து அடையாமல் சிவனடியார்களுக்கு மிகவும் நல்லதே நடக்கும்.

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 6
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 8

Friday, January 1, 2016

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 6

பாடல்:
வாள்வரி அதளதாடை வரிகோவணத்தர் 
   மடவாள் தனோடும் உடனாய் 
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்து என் 
   உளமே புகுந்த அதனால் 
கோளரி உழுவையோடு கொலை யானை கேழல் 
    கொடு நாகமோடு கரடி 
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
    அடியார் அவர்க்கு மிகவே.                 6

பொருள்:
ஒளியும் வரியும் கொண்ட புலித்தோல்(அதள்) ஆடையும், வரிந்து கட்டிய கோவணமும் அணியும் சிவபெருமான் அன்றலர்ந்த(இன்று மலர்ந்த) வன்னி கொன்றை மலர்களையும் கங்கை நதியையும் தன் முடிமேல் அணிந்து, உமையம்மையாரோடு என் உள்ளத்தில் புகுந்து தங்கியுள்ளத்தால், கொல்லும் வலிய புலி(கோளரி உழுவை), கொலையானை, பன்றி(கேழல்), கொடிய பாம்பு, கரடி, சிங்கம் ஆகியன நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு நல்லனவே செய்யும்.

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 5
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 7

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 5


பாடல்:
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் 
   விடையேறும் நங்கள் பரமன் 
துஞ்சிருள் வன்னி கொன்றை நதிசூடி வந்து என் 
   உளமே புகுந்த அதனால் 
வெஞ்சின அவுணரோடும் உருமிடியும் மின்னும் 
    மிகையான பூதம் அவையும் 
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல 
    அடியார் அவர்க்கு மிகவே.                 5

பொருள்:
விடத்தைக் கழுத்தில் அணிந்த நீலகண்டனும், என் தந்தையும், உமையம்மையாரோடு எருதின் மேல் அமர்ந்து வரும் நம் பரம்பொருளாகிய சிவபெருமான், அடர்ந்து கருத்த வன்னிமலரையும், கொன்றை மலரையும் தன் முடிமேல் அணிந்து என் உள்ளத்துள் புகுந்துள்ளான். அதனால், கொடிய சினத்தையுடைய அசுரர்கள், முழங்குகின்ற இடி, மின்னல், துன்பந்தரும் பஞ்சபூதங்கள் முதலானவையெல்லம் (நம்மைக் கண்டு) அஞ்சி நல்லனவே செய்யும். அடியவர்களுக்கு மிக நல்லனவே செய்யும்.

கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 1
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 4
கோளறு திருப்பதிகம் (2ம் திருமுறை) - பாகம் 6